இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஆண்டுக்கு 83 நாட்கள் என்ற வகையில் மூன்று வருடங்களுக்கு இலங்கை கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று அரசாங்க உத்தியோகப்பூர்வ இணையதளம் இன்று (27) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்- மீனவர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் கலந்துரையாடினோம். இலங்கை கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு இடமளிக்கு முடியாது என நான் பிரதிநிதிகளிடம் கூறினேன். அரசாங்கம் அதற்கு இடமளிக்காது. வடக்கு மீனவர்களுக்கு இந்த கடற்பிரதேசம் மிகவும் முக்கியம். இலங்கை கடற்பிரதேசத்திற்கு அனுமதியின்றி நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக்க சில்வாவிடம் கேட்டபோது வழமைப்போலவே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கை கடற்பகுதிக்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.