ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக மக்கா சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை சுட்டிக்காட்டி, அராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவரது மரணம் இயற்கையானது எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் சிலருடன் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று, கடந்த வெள்ளிக்கிழமை றியாத்திலுள்ள கிங் காலிட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை ஹஜ் யாத்திரிகர் ஒருவர் திடீர் சுகவீனமுற்றதை அடுத்தே அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் அவரின் உடல் நிலை ஆபத்தான நிலைமையைக் கடந்துவிட்டதாகவும் அராப் பத்திரிகை செய்தியில் மேலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஹஜ் கோட்டாவுடன் ஒப்பிடுமிடத்து இவ்வருடம் அது 1200ஆல் குறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்முறை இலங்கைக்கு 2300 கோட்டாவே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்காவில் இடம்பெறும் நிர்மாணப் பணிகள் காரணமாகவே இலங்கைக்கான கோட்டா குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.