Breaking
Sun. Apr 28th, 2024

கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான நிதியினை ஒதுக்கிய அரசாங்கத்தின் பிரதமராக தான் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் கூறினார்.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு பவள விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் எம்.ஷாபி தலைமையில் இ்டம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலையின் பழையமாணவர்கள்,உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் மேலும் பிரதமர் உரையாற்றுகையில் –

கடந்த கால யுத்தத்தினால் இப்பிரதேசம் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்தன.இதன் பிற்பாடு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளினால் இன்று இந்த பாடசாலை சிறந்ததொரு நிலைக்கு மாறியுள்ளது.இதற்கு பாடசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட பெற்றோர்களே காரணம்,வசதி வாய்ப்புகளை கொண்ட பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது இப்பாடசாலையின் அடைவினை பாராட்டுகின்றேன்.இந்த நாட்டின் சுதந்திர கல்வியினை கற்று சகலரும் இதன் பயனை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் கல்விக்கான பங்களிப்பினை வழங்கிவருகின்றேன்.நான் கல்வி அமைச்சராக இருந்த போது விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பித்து கல்விக்கான பங்களிப்பினை வழங்கியுள்ளேன்.

குறிப்பாக இந்த நாட்டின் இலவச கல்வியினை சீ டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா ஆரம்பித்ததன் நோக்கத்தினை கடந்த 2015 ஆம் ஆண்டுவரை அடைந்து கொள்ள முடியாத துரதிஷ்ட நிலை காணப்பட்டது.அதன் பிற்பாடு கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்து சென்று 13 வருடம் கட்டாயக் கல்வியினை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.இதே வேளை இந்த கற்றலின் பிற்பாடு தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல விரும்பினால் அவர்களுக்கு அத்துறையில் பயிற்சிகளும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளும் நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.இவ்வாறான கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படாத எவரும் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது.இதனை கல்வி அமைச்சு நடை முறைப்படுத்துகின்றது.சிறந்த மாணவ கல்விசார சமூகத்தினை உருவாக்குவதன் மூலம் இவர்களது முயற்சிகள் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தாக்கம் செய்யும் ஒரு காரணியாக இருப்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியுமானதாக இருக்கின்றது.கடந்த 4 வருடங்களில் 21 பல்கலைக்கழக உயர் பீடங்களை உருவாக்கியுள்ளோம்.அதே போன்று 100க்கும் மேற்பட்ட மாணவ விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன .”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற கருத்திட்டத்திற்கு அமைய பாடசாலைகள் பெயரிடப்பட்டு அதற்கான உபகரணங்களும் வளங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.இதே போன்று கல்விக்காக இன்னும் அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது.அடுத்துவரும் 5 வருடம் கல்வியில் மாற்றங்களை கொண்டுவரும் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன்.

இந்த பாடசாலையின் தேவை தொடர்பில் கோரிக்கைகள் பல முன் வைக்கப்பட்டுளன்ளன.அதில் முக்கியமானதாக சிறந்த விளையாட்டு மைதானமாகும்.இதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருடன் பேசி பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் நீண்டகால திட்டமொன்றினை வகுத்து செயற்பட பணிப்புரை வழங்குகின்றேன்.

தகவல் தொழில் நுட்பமானது மிக முக்கியமானதாகும் இதனை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கான விசேட கல்வி நிலையமொன்றினை ஆரம்பித்துள்ளோம்.இது போல் சகல பாடசாலைகளிலும் இவ்வாறான தேவைகள் உடைய மாணவர்களுக்கான வகுப்பறைகள் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதி நிதி என்ற வகையில் இந்த மாவட்ட மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைத்துவருகின்றார்.குறிப்பாக கல்விக்கான பாடசாலை கட்டிடங்கள்,வீதி அபிவிருத்திகள்,வீட்டுத்திட்டம் போன்றவற்றினை கொண்டுவருகின்றார்.அதே போல் இம்மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கும் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது கூறினார்.

Related Post