கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன். பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும்.
அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கடைக்குச் சென்றிருந்தேன். உங்களது கட்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், என் முதுகில் தட்டி அழைத்தார்.
“சேர் நீங்களே இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்” என்றார். நான்தானே இந்தப் பிரச்சினையை எழுப்பியிருக்கின்றேன் என அவரிடம் குறிப்பிட்டேன்.
“சேர் நீங்கள் இன்று சட்ட தர்க்கங்களை முன்வைக்கின்றீர்கள், உங்களுக்கு அதிகாரம் இருந்த காலத்தில், ஒரு வசனத் தொடரில் அந்த நபரை (ஜனாதிபதியை) இறுக்கியிருந்தால் இந்த நாட்டுக்கு எவ்வளவு சேவை செய்த நபராக வரலாற்றில் இடம்பிடித்திருப்பீர்கள்” என்றார்.
உண்மையில் நான் அந்த கூற்றினால் வெட்கப்பட்டேன் என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என்பதனை தெளிவுபடுத்தும் நோக்கில் ஜே.வி.பி.யினால் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார்.