எம்.எம்.ஜபீர்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபக தலைவர் மறைந்த மனிதர் மர்ஹூம் எம்.எம்.எச்.அஷ்ரப் அவர்களினால் 1996 ஆம் ஆண்டு புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படாமலுள்ள தபாலக கட்டிடத்தில் உப தபாலகம் ஒன்றை இயங்கச் செய்வதன் மூலம் வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, மல்வத்தை போன்ற கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் நன்மையடைவர்.
இப்பிரதேசத்தில் தபாலகமின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இத்தபாலக கட்டிடத்தில் புதிதாக தபாலகத்தை ஏற்படுத்தி இதன் ஊடாக பிரதேச மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காக நேரில் சென்று கட்டிடத்தின் நிலைமையை பார்வையிட்டார்.
இவருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச செயலக காணி பிரிவுக்கான உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.மன்சூர், வளத்தாப்பிட்டி கிராம சேவகர் ஏ.பிரதீப், வளத்தாப்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலய தலைவர் கே.வெள்ளத்தம்பி, சம்மாந்துறை மாஹிர் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் உள்ளிட்ட குழுவின் கட்டிடத்தின் நிலையையும், அதற்கான காணி உரிமம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இதனை தபால் மற்றும் முஸ்லிம் காலாச்சார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக தீர்வு பெற்று தருவதாக இதன்போது வாக்குறுதியளித்தார்.