எமது பிரச்சினைகளுக்குத்தீர்வு கிடைக்கும் காலத்தில், அத்தீர்வை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கிடையில், அரசாங்கத்தின் உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொண்டு முன்னின்று செயற்படும் பக்குவம், முஸ்லிம்களுக்கு இருப்பது போன்று, தமிழ் மக்களுக்கும் ஏற்பட வேண்டுமென கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சதொச விற்பனை நிலையக்கிளையை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,
எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென்று எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தீர்வு கிடைக்கும் என்பதற்காக, அத்தீர்வு கிடைக்கும் வரையில் எமக்குக் கிடைக்க வேண்டிய எல்லாவற்றையும் நாம் இழந்துவிடக் கூடாது. மேலும், தீர்வு எப்போது கிடைக்குமென்பதிலும் சந்தேகம் இருக்கின்றது. கிடைப்பதைக் கொண்டு, எமது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி கண்டுள்ளனர். முஸ்லிம்களின் அரசியலுக்குள் பிரச்சினைகளும் சவால்களும் காணப்படுகின்ற போதிலும் கூட, அவற்றை அவர்கள் சாதுரியமாக வெற்றி கண்டுள்ளனர். நாங்கள் இனவாதம் பார்க்கவில்லை. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பார்த்து நாங்கள் சேவை செய்யவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில், 320 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய வள நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை பட்டிருப்புத்தொகுதியில் அமைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணித்துள்ளார். இந்நிலையில், பட்டிருப்பில் இப்பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.