Breaking
Tue. May 7th, 2024

‘‘நைட்டு ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்!

ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத்தின் தேவையில் அலுவலகங்கள் குளிர்சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக்கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதான் பிரச்னையே ஆரம்பம். தொடர்ந்து ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்னைகளும் நோய்களும் ஏற்படுவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஏசியால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு தவிர்ப்பது எனவும் மருத்துவ நிபுணர்களிடம் உரையாடினோம்…

டாக்டர் கே.ராஜ்குமார்(சுவாச நோய்கள் சிறப்பு மருத்துவர்)

‘‘இன்று குளிர்சாதன வசதி என்பது மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஏசியில் வரும் காற்றானது இயற்கையானது கிடையாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதைப் பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. இன்னொரு புறம் அறையில் உள்ள வெப்பமான காற்றை வெளியேற்றுகிறது. இதற்கு ‘குளோரோஃப்ளுரோ கார்பன்’ மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் உஷ்ணக் காற்றால்தான் புவி வெப்பமடைதல் அதிகமாகி ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.

ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை (அலர்ஜி) உள்ளவர்களுக்கு ஏசி காற்று பல பிரச்னைகளை ஏற்படுத்தும். கூருணர்ச்சி (Hyper Reactive) அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளி ஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பதே நல்லது.  குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏசியிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவற்றில் லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப்பாதையில் இவ்வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.

சில வீடுகளில் விண்டோ ஏசியில் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம்பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்துவிடும். இதில் பூஞ்சைகள் வளரும். கிரிப்டோகாக்கஸ் எனப்படும் பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சையானது சுவாசப் பாதையையும் மூளையையும் தாக்கி ‘க்ரிப்டோகாக்கல் மெனிஞ்சைட்டிஸ்’ எனும் ஆபத்தான நோயை உருவாக்கக் கூடியது.  எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது.

இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டு வலி, முதுகு வலி போன்றவை எளிதாக வரும். இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வணக்கம் செய்து வந்தனர். காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்களில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடைக்கும். இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம்.

ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்பது ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கிவிடும். கூருணர்ச்சி அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.  சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம்பை பாதிப்படையச் செய்து ‘பெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும் முகவாதத்தை உருவாக்கும்.

காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும். வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர்த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சிகளை முறைப்படி தினமும் செய்வது உங்களது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் அமிலத்தன்மை உடைய திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தவிர்த்து, மற்ற பழங்களை உண்ணலாம்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்கள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத்து சமாளிக்கலாம். முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும்…”

டாக்டர் எல்.ஆர்த்தி (சருமநல நிபுணர்)

‘‘ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது. எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இல்லாவிட்டால் சருமம் உலர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்’ எனப்படும் வயதுக்கு முந்தைய மூப்புத் தோற்றம் ஏற்படும். ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.  சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இவர்களுக்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர்வதை சரிசெய்து கொள்ளலாம்.

சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீம் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். ஹையலுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங்களைத் தவிர்க்கலாம்.

ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும். இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏசியை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *