ஐ.நா. மனித உரிமைகள் பேர வையின் புதிய ஆணையாளரான ஜோர்தானின் செய்யத் அல் ஹுஸைனை சந்தித்துப் பேச்சு நடத்து வதற்கு இலங்கைக்கான ஜோர்தான் நாட்டுத் தூதுவரின் உதவியை கொழும்பு நாடியுள்ளது என அறியமுடிகின்றது.
இதற்காகத் தூதனுப்பும் பணியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை அரச தலைமை களமிறக்கி பேச்சுக்கான நடவடிக்கைகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரியவருகின்றது.
மேற்படி முஸ்லிம் அமைச்சருக்கும், ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரான அஸன் மெஹ்மூட் மொஹமட் அல் ஜவாமிக்கும் இடையில் உள்ள நட்புறவை அடிப்படையாகக் கொண்டே சந்திப்புக்கான பேச்சுகளை முன்னெடுக்குமாறு அரச உயர்மட்டம் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளரைச் சந்திப்பதற்காக உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதற்கான நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டு விருகின்றது. மேலும், புதிய ஆணையாளருக்கான அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பான் பிரதமரூடாகவும் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கான ஜோர்தான் நாட்டுத் தூதுவரூடாகவும் புதிய ஆணையாளரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை விடுப்பதற்கு அரச உயர்மட்டம் முயற்சித்து வருகின்றது.
இதனூடாக இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகளையும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் நேரடியாகப் பார்வையிடுமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருக்கு அழைப்பு விடுக்க அரசு எதிர்பார்க்கின்றது என்றும் தெரியவருகின்றது.
புதிய ஆணையாளராகப் பதவியேற்றதன் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அல் ஹுஸைன் நிகழ்த்திய கன்னி உரையில், சர்வதேச விசாரணைக்கு இலங்கç ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை நடவடிக்கையிலிருந்து தாம் பின்வாங்க மாட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, புதிய ஆணையாளரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளில் அரச உயர்மட்டம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் ஜோர்தான் நடுநிலை வகித்தமைக்கு புதிய ஆணையாளர் ஹுஸைனின் பங்கு அளப்பரியது எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.