அமைச்சர் நவீன் திசாநாயக்க விரைவில் ஆளுங்கட்சியிலிருந்து தாவி எதிர்கட்சி வரிசையில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஐ.தே.க.யின் முன்னாள் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான காமினி திசாநாயக்கவின் மூத்த மகனும் ஐ.தே.க.யின் தலைமைத்துவக்குழு தலைவர் கரு ஜயசூரிவின் மகள் லங்கா ஜயசூரியவை திருமணம் செய்து ஐ.தே.க. குடும்பத்தை சார்ந்தவர்.
2000ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நாடாளுமன்ற அங்கத்துவம் பெற்றுள்ள இவர், 2007ம் ஆண்டு தொடக்கம் ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார்.
எனினும், அடிக்கடி ஜனாதிபதி மற்றும் ஆளுந்தரப்பினருடன் மோதிக் கொள்ளவும் செய்கின்றார்.
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டமொன்றின்போது இவரைப் பார்த்து நவீன் விரும்பினால் கட்சி மாறலாம் என்று கிண்டலடித்திருந்தார்.
இது அமைச்சர் நவீனைக் கடுமையாக காயப்படுத்தியிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.
தற்போதுள்ள அரசியல் நிலைமையில் கட்சி மாறுவது ஒன்றே தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைக்கும் என்று அவர் தன் ஆதரவாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
வரும் 24ம் திகதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள அவர், அதன் பின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
இதன் பிரகாரம் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் நடவடிக்கையை நவீன் திசாநாயக்க முதலாமவராக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மேர்வின் சில்வா, நிமல் சிறிபால டி சில்வா, சுமேதா ஜயசேன உள்ளி்ட்டோரும் கட்சி மாறத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.