Breaking
Mon. May 6th, 2024

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனேவல்பொலயில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச கிளை  திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏ.ஆர்.எம்.தாரிக்  மற்றும் கெக்கிராவ, இப்பலோகம, திறப்பனை, கெப்பித்திகொல்லாவ பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் உரையாற்றுகையில் ,
மிகவும் திறமை வாய்ந்த ஒரு அமைச்சராகத் திகழும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உதவியால், இன்று இந்த சதொச நிலையம் இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய நிலைமையில் காணப்பட்ட லங்கா சதொச நிறுவனமானது, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அதிகளவான இலாபத்தை ஈட்டும் ஓர் நிறுவனமாக மாற்றப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமே.
மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு மிகவும் உகந்த இடமாக காணப்படும் இந்த சதோச நிறுவனத்தின் மூலம், நம் நாட்டு மக்கள் அதிகளவில் பயனடைகிறார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
அனுராதபுர மாவட்ட வாழ் மக்களின் நலன்கருதி,  அனுராதபுர மாவட்டத்தின் பல பாகங்களிலும் எதிர்வரும் காலங்களில் இன்னும் சில சதொசநிலையங்களை நிறுவுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
இதன் மூலம் “வடக்கிற்கும், கிழக்கிற்கும் மட்டும்தான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவைகள் சென்றைடைகின்றன” என்ற ஒரு சில அரசியல் அடிவருடிகளின் கருத்துக்கள் முறியடிக்கப்படுமென எதிர்ப்பார்க்கின்றேன் என்று தெரிவித்தார்.

Related Post