கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயர் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்.அதற்கான செயற்பாடுகளில் இன்றிலிருந்து நான் இறங்கப்போகின்றேன். என்று கிராமிய பொருளாதார விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட அந்தக்கொடூரமான சம்பவங்களின் பின்னர் இந்த நாட்டிலே மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.அந்த நெருக்கடியான சூழலிலும் தனது மக்களின் பாரிய உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காருங்கள் என்று தமது மக்களுக்கு தொடர்ந்தேர்ச்சியாக வலியுறுத்தி வந்ததன் விளைவு இந்த நாட்டில் ஏற்படவிருந்த பாரிய சமூகக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சிங்கள முஸ்லிம் கலவரமோ அல்லது தமிழ் முஸ்லிம் கலவரமோ ஏற்பட்டிருக்கும்.
இக்கட்டான உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் கத்தோலிக்க மக்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து அமைதியையையும் சமாதானத்தையும் வலுப்பெறச்செய்த கர்த்தினால் அவர்களுக்கு முழு முஸ்லிம் சமூகமும் ஏன் இந்த நாடும் கடமைப்பட்டுள்ளது.
இப்படித்தான் மதத்தலைவர்கள் வழிகாட்ட வேண்டுமென்ற தார்மீக பொறுப்பு மிக்க செய்தியை இந்த நாட்டுக்கும் மதத்தலைவர்களுக்கும் கார்த்தினால் அவர்கள் விதைத்துள்ளார்கள்.
ஆகையினால் ,இந்த தேசத்தில் ஏற்படவிருந்த பாரியதொரு அழிவினை தமது ஆன்மீகம் கலந்த வார்த்தைகளுடாக இல்லாது செய்து சகல இன மக்களின் மனங்களையும் குறிப்பாக இன்று கொடூரர்களின் மிலேச்சத்தனத்தினால் நிலைகுலைந்து நிற்கும் அப்பாவி முஸ்லிம்களின் மனங்களை வென்ற மரியாதைக்குரிய கர்த்தினால் அவர்களுக்கு அமைதிக்கான நேபால் பரிசு வழங்கப்படவேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பான வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதற்கான பணிகளில் இன்று முதல் இறங்கப்போகின்றேன்.என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.