Breaking
Wed. May 22nd, 2024

“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மற்றும் மின் வணிகம் ஊடாக மேலும் வலுப்படுத்தவுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நெலும்பொக்குண அரங்கத்தில் இடம்பெற்ற ஆடைத் தொழிற்துறையின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பினை முடித்த, 500 க்கும் அதிகமான புதிய பட்டதாரிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா, கூட்டு ஆடை சங்கப் பேரவையின் தலைவர் ஷரட் அமலீன் மற்றும்  செயலாளர் நாயகம் ரூலி குறே, கைத்தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் ஜவுளி அபிவிருத்தி பிரிவின் மேலதிக செயலாளர் எம்.ஏ.தாஜுடீன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துக்கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்று 500 பட்டதாரிகள் பட்டப்படிப்பினை முடித்து வெளியேறியுள்ளனர்.  இந்நிலையில் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனத்தின் பாடநெறிக்கான பங்கேற்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 21600 ஆகும்.  பல முக்கிய சாதனைகளை ஈட்டி, ஆடை மற்றும் தோல் உற்பத்தித் துறைகளுக்கான உயர்தர பயிற்சிகளை மேற்கொண்டுவரும் ஒரேயொரு அரசு நிறுவனம், இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனமாகும். 2017 ஆம் ஆண்டில் முதல் தடவையாக இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் 50,௦௦௦ சோதனைகளை நடத்தியதுடன் 5400  பயிற்சி பெறுவோருக்கு பயிற்சி நெறிகளை வழங்கியது.

சமீபத்திய தொழில்சார் புதிய வெளிப்பாடுகளுடன் ஜவுளி மற்றும் ஆடை தொழிற்துறை, தொழில்நுட்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புடனான பயிற்சியினை இந்த வெற்றிகரமான பட்டதாரிகள் பெற்றுக்கொண்டனர். இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், அதன்  விரிவாக்கத்திற்கு முக்கிய திட்டங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி, இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் முதற் காலப்பகுதியில், ஆடைத்துறையின் செயல்திறன் சிறப்பித்துக் காட்டியது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில்,  ஆடை உற்பத்திகளின் மொத்த ஏற்றுமதி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதனை 2017 ஆம் ஆண்டுடன் (அதே மாதங்களுடன்) ஒப்பிடுகையில் 5% சதவீத அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடைகளையும், அமெரிக்காவிற்கு மற்றுமொரு  பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆடைகளையும் மற்றும் உலகின் ஏனைய நாடுகளுக்கு 321 மில்லியன் டொலர்களை நாங்கள் ஏற்றுமதி செய்தோம்.  ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 7.76% சதவீமாகவும் மற்றும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.77% சதவீமாகவும் அதிகரித்துள்ளது. நமது குறைந்த தொழிலாளர் செலவீனங்கள் மூலம் நீண்டகாலத்திற்கு இந்த வெற்றி விகிதத்தை தக்க வைத்துக்கொண்டு அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் அமைச்சர்.

கூட்டு ஆடை சங்க பேரவையின் தலைவர் ஷரட் அமலீன் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை ஆடைத் துறையின் அடுத்த கட்டத்திற்கான மூன்று பரிந்துரைகளை நான் முன்மொழிய விரும்புகிறேன். இத்துறைக்கு உள்வாங்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளம் மற்றும் மின் வணிகம் மீதான செயற்பாட்டை அதிகரித்தல். இரண்டாவதாக முடிவு மீதான முடிவு தொடர் கோவைக்கான வேகம் மற்றும் விரைவூக்கம். மூன்றாவதாக, இலங்கையை மொத்த தீர்வுகள் மையமாக மாற்றுவது – இது முக்கியமானதாகும். 2009 ஆம் ஆண்டின் 12 வது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தொடர்ச்சியான 30 வருட வரலாற்றை வெற்றிகரமாகக் கொண்டதுடன் ஒரு நிறுவனமாக முறையாக நிறுவப்பட்டது” என்றார்.

-ஊடகப்பிரிவு-

Related Post