Breaking
Sat. Dec 6th, 2025

தவ்ஹீத் ஜமாத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

மேலும் பௌத்த மதம் பற்றி தவ்ஹீத் ஜமாத் தெரிவித்த கருத்து தொடர்பில் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சிடம் கருத்து கோர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் கால அவகாசம் தேவை என பொலிஸார் நீதிமன்றை கோரியுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த பிரதான நீதவான், வழக்கை டிசம்பர் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

அன்றைய தினம் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருந்ததாக – செய்தியாளர் தெரிவித்தார்

Related Post