Breaking
Sun. Apr 28th, 2024

தற்போதைய தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலை மாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளமையால், நேர்மையான அரசியல் கலாச்சாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

கல்முனையில் தனது அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஜனநாயக தேர்தலை விரும்புகின்ற மக்களின் மனங்களில் இன்று ‘பணம் இல்லையென்றால் தேர்தல் களம் இல்லை’ என்கின்ற ஒரு நிலை உருவாக்ககப்பட்டுவிட்டது. அரசியல்வாதிகள் பல கோடிகளை செலவு செய்து, தனது வெற்றிக்காக களத்தில் செயற்பட்டு வெற்றிபெற்றால், பின்னர் மக்களுக்கான சேவை என்பதும் பூச்சியமாகி விடுகின்றது. முதல் போட்டு ஒரு தொழிலை செய்கின்ற ஒருவர் எவ்வாறு தனது இலாபத்தை நோக்கமாகக் கொண்டு  வியாபாரத்தை செய்வாரோ, அவ்வாறே அரசியலும் ஒரு வியாபாரமாக ஆக்கப்படும்போது அங்கும் இலாப நோக்கமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அதன் பிறகு குறித்த அரசியல்வாதி, எவ்வாறு ஜனநாயக நீரோட்டத்தில் மக்களுக்கு சேவை செய்வார்.  தனது அரசியல் முதலீட்டிலிருந்து 05 வருட காலத்திலும் தான் உழைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார். இவ்வாறுதான் ‘மக்களுக்காக மக்களால் ஆளப்படும் ஆட்சி’ எனும் ஜனநாயக ஆட்சி நடைபெறாமல், பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றும் நிறைந்ததாக, தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் சிலரால் அரசியல் விமர்சனத்திற்குள்ளாகி விருகின்றது.

இவ்வாறான நிலையில், எதிர்கால சந்ததிகளுக்கு நேர்மையான ஆட்சித் தத்துவங்களை கொண்டு சென்று, அவர்களை சிறந்தவர்களாக எவ்வாறு உருவாக்க முடியும்? என்கின்ற கேள்வி எழுகின்றது. அபிவிருத்தி மற்றும் உரிமை என்று பார்க்கின்றபோது, அபிவிருத்தியும் ஒரு குடிமகனின் உரிமையாகும். பொய்வாக்குறுதிகளை  தேர்தல் காலங்களில் மட்டும் அள்ளி வீசிவிட்டு,  காலாகாலமாக மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட்டு, அரசியல் அறிவுள்ள, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நேர்மையானவர்களை மக்கள் இம்முறை பாராளுமன்றுக்கு அனுப்ப முன்வர வேண்டும். இது மக்கள் முன் உள்ள மிக முக்கியமான தேவையாகும்.

திகாமடுல்ல மாவட்ட அரசியல் நிலைமையை பொறுத்தவரை, அதிகாரத்திலிருந்த அரசியல்வாதிகள்  தங்களின் சுகபோகங்களை கருத்தில் கொண்டு வாழ்ந்தார்களே தவிர, குறிப்பிடத்தக்க அளவு எந்த அபிவிருத்தியையும் அவர்கள் செய்யவில்லை என்பதை ஒவ்வொரு பிரதேச மக்களும் கூறிவருகின்ற நிலையில், தற்போது புதிய மாற்றத்திற்காக மக்கள் தயாராகி வருவதையும், கடந்தகால அரசியல்வாதிகளுக்கு மக்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுக்க முனைந்து செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது” என்றும் தெரிவித்தார்.

Related Post