விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையை அந்த நகரமெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிபரப்ப செய்ய தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.
வருகிற 25ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ள நரேந்திர மோடி, அங்கு ஐநா சபையில் உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த நாள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் டைம் சதுக்கத்தில் பேருரையாற்ற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில், மோடியின் உரையை நகரெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிப்பரப்ப தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.
மோடி ஹிந்தியில் உரையாற்ற இதை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண பலரும் டிக்கெட் கேட்டு ஆவலுடன் முன்பதிவு செய்ய, ஆனால் மற்ற பலரும் ஏமாற்றத்தில் டிக்கெட் இன்றி தவித்துள்ளனர். இவர்களின் தவிப்பைப் போக்கவே இந்த நேரலை ஒளிப்பரப்பு என்றும், இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் பணம் நிதியாக தொண்டு நிறுவனங்களுக்கு செல்லும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.