நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை தேசிய தரத்திலிருந்த சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடனான விசேட செயற்றிட்டமொன்று இன்று (23) உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் பம்பரகல பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது கடந்து ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மலர் செய்கை முயற்சியாளர்களின் கூட்டுறவுச்சங்கத்தினரது விற்பனை நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.கடந்த அரசின் போது 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்திற்காக தற்போது 80 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இன்னும் சில மாதங்களில் கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கவுள்ள விற்பனை மற்றும் காட்சிக்கூடத்திற்கான முதற்கட்டப் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது சுமார் 5000 மலர் செய்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் நுவரெலியா நகர ஆளுநர்- அரசியல் தலைவர்கள் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.