ஆதாள பாதாளத்தில் தற்போது விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை போன்று, பொது மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதவாளர்களுடன் அத்தனகல்ல தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனது தந்தை, தாய் மற்றும் எனது காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமாதானமாக வாழ்ந்தனர். ஆனால், கடந்த ஓரிரு வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து புதிதாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை. யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறி நாட்டில் உள்ள அனைத்து வளங்களும் இன்று சூறையாடப்படுகின்றன. அடிமட்டம் வரை சூறையாடியுள்ளனர்.
இந்த சொல்லிற்காக என்னை மன்னியுங்கள். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி என இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அனைவரினதும் அரசாங்கம் ஒன்றை அமைக்கவே கூடியுள்ளோம்.” என்றுள்ளார்.