கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று காலை 8 மணியளவில் குறித்த மாணவர்களின் மட்டக்களப்பில் உள்ள வீடுகளுக்கு சென்ற சிரேஸ்ட மாணவர்கள் சிலர் குறித்த மாணவர்களை அழைத்துச்சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து சென்றவர்கள் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மாணவர்களை தேடியுள்ளனர். இதன்போது குறித்த மூன்று மாணவர்களும் காயங்களுடன் கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள கடையொன்றின் அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக மது அருந்தவைத்து கடுமையாக தாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.