Breaking
Sun. May 5th, 2024

உங்களுக்கு தெரியுமா? சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்றும் பரவும் தன்மை கொண்டது. ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார். இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது.

சும்மாவா சொன்னார்கள் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று. ஆக மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து ‘சிரிப்பு’தான் என்பது உண்மையே. இன்று டி.வி. சேனல்கள் பலவற்றில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை என்றே சொல்லலாம்.

கடுமையான, கொடுமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் மனம் சோகத்திலேயே இருக்கும். அதனையே தொடர்ந்து நினைப்பது ஒரு வழக்கமாகி விடும். அதனால் எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பிறரையும் மகிழ்ச்சியாக வைக்க முடியாது. முடிவில் சோகத்திலேயே பழகும் ஒரு மனிதன் நிரந்தர நோயாளியாகவே ஆகி விடுகின்றான். சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு இயற்கையாகவே ஆரோக்கியம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

மனதிற்கு சோர்வு ஏற்படும் பொழுது ‘சிரிப்பு’ ‘தமாஷ்’ ‘ஜோக்ஸ்’ போன்ற இடங்களில் கண்டிப்பாய் உங்களை நீங்கள் நிலை நிறுத்தி கொள்ளுங்கள். ஒன்றினை நன்கு உணருங்கள், அழுவதற்கும் கவலைப்படுவதற்கும் என நீங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு நொடியும் மகிழ்வோடு வாழ்வதற்கே நாம் பிறந்துள்ளோம் என்பதனை மனதில் நன்கு பதிய வையுங்கள்.

சிரிப்பு

* நன்கு வாய்விட்டு ஒருமுறை சிரித்தால் உடல் டென்ஷன், மனச் சோர்வு நீங்கி, இறுகிய தசைகள் தளர்ந்து விடும். சுமார் ஒரு மணி நேரம் இந்த நல்ல அதிர்வலை இருக்கும்.

* மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும். நோய் எதிர்ப்பு திசுக்களையும், சக்தியினையும் உடலில் உருவாக்கும்.

* சிரிப்பினால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் உடலில் ஒரு ஆரோக்கிய உணர்வும், உடல்வலி நீக்கமும் ஏற்படு

* சிரிப்பு ரத்தக் குழாய்களை நன்கு இயங்க வைத்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறையும்

சிரிப்பின் நன்மைகள்:

* வாழ்க்கையினை இனிமையாக்கும்
* பயம், படபடப்பு இருக்காது.
* மனநலம், மனநிலை உற்சாகமாய் இருக்கும்.
* உறவுகள் பலப்படும்.
* கூட்டு முயற்சிகள், வெற்றியாய் முடியும்.
* வேற்றுமைகள் நீங்கும்.
* ஆக்கப்பூர்வ சிந்தனைகளும், செயல்களும் ஏற்படும்.

தானே தனியாய் அமர்ந்து சிரிப்பது என்பது சரியாக இருக்காது. சிரிப்பதற்கு உடன் மக்கள் வேண்டும். குடும்பம், உறவினர், நண்பர் என நமக்கு ஒரு சின்ன கூட்டம் தேவை. இவர்களுடன் சிரிப்பதற்கான வாய்ப்புக்களை, சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இவர்களுடன் சேர்ந்து தமாஷான சினிமா, டி.வி நிகழ்ச்சியினைப் பாருங்கள்.

* நகைச்சுவை கலை இப்பொழுது அநேக இடங்களில் உருவாகியுள்ளது. அங்கு செல்லுங்கள்.

* சிரிப்பான கதை, ஜோக்ஸ் என படியுங்கள்.

* சிலர் தன் பேச்சிலேயே பிறரை நன்கு சிரிக்க வைப்பார்கள். அவர்கள் இருக்கும் இடமே கலகலவென இருக்கும். அவர்களுடன் அடிக்கடி பேசுங்கள்.

* சிரிப்புக்கான ‘யோகா’ வகுப்புகள் கூட இருக்கின்றது. எப்பொழுதும் எந்தகாரணமும் இன்றி ‘உம்’ என்ற முகத்துடன் இருப்பவர்களை இந்த வகுப்பில் சேர்த்து விடுங்கள்

* குழந்தைகளுடன் விளையாடுங்கள்.

* செல்லப் பிராணி ஒன்றினை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

* புன்னகைக்கு எந்த காரணமும் தேவையில்லை. யாரையும் சந்திக்கும் பொழுது புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பாருங்கள். இது உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றி விடும். அதை விட்டு எனக்கு அது இல்லை இது இல்லை’ என புலம்புவதனையே வாழ்க்கையாக்கி விடாதீர்கள்.

* பலரின் பேச்சு கூட கோபத்தால் கொப்பளித்தபடி தான் இருக்கின்றது. சாதாரண வார்த்தைகள் என்பதே காண அரிதாகி விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது. தமாஷ் செய்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சாலேயே பிறரை காயப் படுத்துபவர்களும் உண்டு. கீழ்தரமான இந்த குணங்களை விட்டு பேச்சு கூட பிறரை காயப்படுத்தாத நகைச்சுவையுடன் இருக்கட்டும். இப்படி இருப்பவர்களை அனைவரும் விரும்புவர்.

ஏதேனும் ஒரு பிரச்சனை உங்களை வாட்டி வதைக்கிறதா? நீங்களே உங்களை கீழ்கண்ட கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.

* இப்பிரச்சனைக்காக இந்த அளவு வருந்துவது தேவைதானா?
* பிறரை மனம் நோகச் செய்வது சரிதானா?
* இது அந்த அளவு முக்கியமானதா?
* இதனை சரி செய்ய முடியுமா?

வாழ்க்கை என்றால் போராட்டம் தான். சோதனை தான். அதற்காக அழுத கண்ணும், சிந்திய மூக்கும், கையில் கைகுட்டையுமாக வாழ வேண்டுமா என்ன?

ஒரு ஆய்வு நடந்தது. சர்க்கரை நோயாளிகளை உணவுக்குப் பின் இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினரை தமாஷான சிரிப்பு மிகுந்த நாடகம் ஒன்றினை பார்க்கச் செய்தனர். மற்றொரு பிரிவினரை சற்று திகிலான நாடகத்தினை பார்க்க செய்தனர். அவர்களின் சர்க்கரை அளவினை பரிசோதித்த பொழுது தமாஷ் நாடகத்தை பார்த்தவர்களின் சர்க்கரை அளவு சரியான அளவில் இருந்தது. திகில் நாடகத்தினை பார்த்தவர்களின் சர்க்கரை அளவு அதிகரித்து இருந்தது. ஆகவேத்தான் சர்க்கரை நோயாளிகளை எப்பொழுதும் டென்ஷன் இன்றி மகிழ்ச்சியுடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர் கொள்ள வேண்டியது. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அழுபவர்களாகவும், கோபப்படுவர்களாகவும் இருக்கின்றார்களா? உங்கள் வளர்ப்பில் தவறு இருக்கின்றது என்று அர்த்தம். செல்லம் என்ற பெயரில் அக்குழந்தையின் வாழ்வினை கெடுத்து விடாதீர்கள். ஒரு மன நல மருத்துவரின் உதவி பெற்று அக்குழந்தை மகிழ்ச்சியான வாழ்வினைப் பெற உதவுங்கள்.

சோர்வு

சோர்வாக இருக்கின்றது என்பது வயது கூட கூட நம்மால் அடிக்கடி கூறப்படும் ஒரு வார்த்தை. ஆனால் இதனை முறியடிக்க பல எளிய வழி முறைகள் உள்ளன. சில வழிமுறைகள் வயது கூடுவதால் ஏற்படும் தாக்குதல்களை கூட கட்டுப்படுத்தும்.

* சர்க்கரை நோய், இருதய நோய், மூட்டுவலி, ரத்த சோகை, தைராய்டு பிரச்சினை போன்றவைகளால் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. மருந்துகளால் கூட சோர்வு ஏற்படலாம். உதாரணமாக ரத்த கொதிப்பு மருந்துகள் போன்ற சில வகை மருந்துகளாலும் சோர்வு ஏற்படக் கூடும். அவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை மாற்றம் செய்வது பலனளிக்கும்.

* சோர்வாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் யாராலும் முடியாது. ஆனால் ஆய்வுகள் கூறுவது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சோர்வு தாக்காது. அதேபோன்று சோர்வாக இருக்கும் போது சற்று நடங்கள். உங்களின் இருதயம், நுரையீரல், தசைகள் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

* யோகா பயிற்சியை 10&15 நிமிடங்களுக்கு தினமும் செய்ய பழகுங்கள். சோர்வு காணாமல் போய் விடும்.

* தண்ணீர் நன்கு குடியுங்கள். நீர் சத்து குறைவு மிகுந்த சோர்வினை ஏற்படுத்தும்.

* இரவு 9&10 மணிக்குள் தூங்க செல்ல பழகுங்கள்.

* பொழுதுபோக்கு என ஏதாவது ஒன்றினை பழகுங்கள்.

* முறையான நேரத்தில் உணவு, வேலை என பழகுங்கள்.

* எடை அதிகம் இருக்கின்றதா? சோர்வு ஏற்படும். எடையினை குறைத்து விடுங்கள். அன்றாடம் எடையினை பரிசோதனை செய்யுங்கள். உடல் எடையை அதிகரிக்க விடாதீர்கள்.

* சிறிது சிறிதாக அவ்வப்போது உண்ணுங்கள். உடல் லேசாக இருக்கும். சுறு சுறுப்பாக இருக்கும்.

* உங்கள் உணவில் சிறிதளவு பாதாம், முந்திரி இருக்கட்டும். நார்சத்து உணவு இருக்கட்டும். அசைவ உணவு உண்பவர் என்றால் மீன் இருக்கட்டும். இதில் தேவையான மக்னீசியம் கிடைப்பதால் சோர்வு ஏற்படாது.

* மதியம் சிறிது நேரம் சாய்வு நாற்காலியில் சாய்ந்து 20 நிமிடம் ஓய்வு எடுங்கள். இது உங்கள் சோர்வினை நன்கு நீக்கும்.

* காலை உணவினை ஒரு போதும் தவிர்க்காதீர்கள். இது மிகுந்த சோர்வினை ஏற்படுத்தும். இதனால் மதிய உணவினை அதிகம் உண்ணும் வழக்கமும் அடிக்கடி டீ, காபி அருந்தும் வழக்கமும் ஏற்படும். இது உடலினை அதிகம் பாதிக்கும்.

* குடி பழக்கம் வேண்டவே வேண்டாம்.
* குறைந்த அளவு சர்க்கரை, ஸ்வீட் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
* புரத சத்து மிகுந்த உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.
* தைராய்டு டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* வைட்டமின் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
* காய்கறிகள், பழங்கள் அன்றாடம் உண்ணும் வழக்கம் ஏற்படட்டும்.
* இரும்பு சத்து மிகுந்த உணவு தேவை.
* பி காம்ப்ளெக்ஸ் சத்து தேவை.
* காபி, டீ அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
* நன்கு சிரியுங்கள்.
* தினமும் சிறிது எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
* சிகப்பு நிற பூக்களை பாருங்கள். உடனடியாக சோர்வு நீங்கும் இது உண்மை.
* ஆபீசில் அவ்வப்போது சிறிது எழுந்து நடக்கவும்.
* தினமும் சிறிது பச்சை காய்கறிகளை உண்ணுங்கள்.

* மாத விலக்கு காலங்களில் ஏற்படும் சோர்வு ஹார்மோன் மாறுதல்களால் ஏற்படுவதாக இருக்கும். இக்காலங்களில் அடிக்கடி சிறிது சிறிதான உணவும் புரதச் சத்து மிகுந்த உணவும் சாப்பிடலாம். நன்கு நீர் குடிப்பதும் சோர்வினை அகற்றும்.

* கர்ப்ப காலங்களில் சோர்வு ஏற்பட்டால் ரத்த சோகை ஏற்படுகின்றதா என்பதனை முறையாக மருத்துவ பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளவும்.

* தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் சோர்வு ஏற்பட்டால் உடலில் நீர் பற்றாக்குறை இருக்கின்றது என்று உடனடியாக அறிக. தாய்பால் கொடுக்கும் முன் ஒரு தம்ளர் தண்ணீரோ, பழச்சாறு பருகவும்.

* மாதா விடாய் நிற்கும் காலத்திலும் அதற்கு பின்பும் சோர்வு ஏற்பட்டால் நல்ல ஆரோக்கிய உணவும், போதுமான தண்ணீரும் எடுத்துக் கொள்கின்றீர்களா என்று ஆய்வு செய்து கொள்ளவும். இக்கால கட்டத்தில் அதிக சோர்வு ஏற்பட்டால் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *