தேர்தலுக்கான மஹிந்த அரசின் இலஞ்சமே மின்கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைக் குறைப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்தவினதும் அவர் தலைமையிலான அரசினதும் பொய்யுரைகளை இனியும் நாட்டு மக்கள் நம்பப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“நாட்டு மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் ஆட்சிக்கு வந்த நான் தேர்தலுக்காகச் செயற்படும் தலைவன் அல்லன். மின்கட்டணத்தை நாம் குறைத்தது தேர்தலை இலக்காகக் கொண்டல்ல. அன்று நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அதனை மேற்கொண்டோம்” என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
“நுரைச்சோலை நிர்மாணிக்கப்பட்டதன் பின் மின் கட்டணத்தைக் குறைப்போம் எனக் கூறியிருந்தோம். அதற்கிணங்க நுரைச்சோலை ஆரம்பிக்கப்பட்டதும் நாம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் நேற்று உதயன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“உண்மையில் தேர்தலை முன்னிட்டு மின்கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைகளை ஜனாதிபதி மஹிந்த குறைக்கவில்லையெனில்இ ஊவா மாகாணசபைத் தேர்தல் நடந்து முடிந்த கையோடு இந்த விலைகளைக் குறைத்திருக்கலாம்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள சில நாட்களுக்கு முன்னர் மின் கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைகளைக் குறைத்துவிட்டு அதற்குத் தற்போது ஜனாதிபதி பொய் விளக்கம் வழங்குகின்றார்.
தேர்தலுக்கான மஹிந்த அரசின் இலஞ்சமே மின் கட்டணம் மற்றும் எரிபொருட்களின் விலைக் குறைப்பாகும். எனவே, ஜனாதிபதி மஹிந்தவினதும் அவர் தலைமையிலான அரசினதும் பொய்யுரையை இனியும் நாட்டு மக்கள் நம்பப்போவதில்லை. மக்களே அடுத்த கட்டத்தை தீர்மானிக்கவேண்டும்” – என்றார்.