முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று 25-09-2014 சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளராக மதானி நியமிக்கப்பட்டமையின் ஊடாக, இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும். என்னுடைய சொந்த சகோதரர்களைப் போன்றே முஸ்லிம்களை நடத்துவேன்.
முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளும், மதானியும் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும்.
இலங்கைக்கு விஜயம் செய்து அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருதனை பார்வையிட முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையை முஸ்லிம் கூட்டுறவு நாடுகள் அமைப்பிற்கு வெளியே வைத்து நோக்கவில்லை.
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவிற்கு மற்றுமொரு விஜயத்தை மேற்கொள்ளுமாறு மதானி ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.