Breaking
Sun. Apr 28th, 2024

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதை அடித்தளமாக கொண்டு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி வரவேற்றுள்ளது.

இது குறித்து நன்றி தெரிவித்து நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை நோக்கி முன்னகர்வதற்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறையாக 13ஆவது திருத்தத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்வதுதான்.

இதையே நாங்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளிடமும், தமிழ் மக்களிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் உங்களைச் சந்தித்த கூட்டமைப்பினரோ 13 ஆவது திருத்தத்தை அர்த்தமற்றது என்றும், அதை அமுல்படுத்தி தீர்வொன்றை நோக்கிச் செல்லமுடியாது என்றும் கூறிவருகின்றார்கள்.

இந்த நிலையில் இன்று அவர்களுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் கூட்டுறவாக செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண உழைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அதேபோல் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இந்திய அரசால் முன்னெடுக்கப்படும் உதவிகளை தொடருவதாகவும், இவ்விவகாரங்களில் இந்திய அரசு தவறாமல் கரிசனையோடு செயற்படும் என்றும், இலங்கையில் தமிழ் மக்கள் நீதி, பாதுகாப்பு, சமத்துவம் பெற்று வாழ வேண்டும் என்றும் நீங்கள் கூறியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உங்களது வார்த்தைகள் தமிழ் மக்களுக்கு நிச்சயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

உங்களின் பெறுமதி மிக்க ஆலோசனைகளை கூட்டமைப்பினர் சிரமேற்று செயற்பட வேண்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *