13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை.
இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன.
ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும் பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தக் கட்சிக்கும் இதுவிடயத்தில் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், எமக்கு நாட்டில் வாழுகின்ற சிங்கள – பெளத்த மக்களில் இருப்பே முக்கியமாகும்.
இவர்களைப் பாதுகாத்து இவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பிலான ஆரோக்கியமான அணுகுமுறையைக் கையாள்கிறார். இதனை வரவேற்கின்றோம்.
ஆனால், தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.
எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இதன்போது பயனற்ற 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.