Breaking
Sun. May 19th, 2024
சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன.

கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று  (10) மன்றுக்கு அறிவித்தனர்.

சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான 234 மில்லியன் ரூபா எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்காததை அடிப்படையாகவும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கை துரோகம் செய்தமை, திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் யோஷித்த உள்ளிட்ட 9 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே மேற்படி விடயம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கில் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் உள்ள லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷ, நிஸாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அஷான் ரவிநாத் பெர்ணான்டோ, கவிஷான் திஸாநயக்க ஆகிய முதல் ஐந்து சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளினால் மன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.

6வது சந்தேக நபரான சாடியா கருணாஜீவ தொடர்ந்தும் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் நேற்றும் மன்றில் ஆஜராகவில்லை.

7வது சந்தேக நபரக பெயரிடப்பட்டுள்ள சி.எஸ்.என். நிறுவனம், 8வது சந்தேக நபரான எல்.ஓ.எல்.சி. நிறுவனம், 9வது சந்தேக நபரான ராஜபக்ச மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது முதலாவது சந்தேக நபரான யோஷித சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் சிரேஷ்ட சட்டத்தரணி தினேஷ் கனகரத்னம், சந்தியா தல்துவ, சம்பத் மெண்டிஸ், நாமல் ராஜபக்ச, பிரேமநாத் சி தொலவத்த உள்ளிட்டோர் மன்றில் ஆஜராகினர்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *