Breaking
Wed. May 15th, 2024

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வட்டார முறைத் தேர்தல் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் சாதகமாக இருக்கலாம். ஆனால், வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இது சாதகமான தேர்தல் முறையல்ல.

வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் 3000 வாக்குகளை கொண்டிருந்தாலும், வட்டாரத்தில் முன்நூறு, நானூறு வாக்குகளையே கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்றுதான் மலையகத் தமிழர்களும் உள்ளனர். அதனால் வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள சிறுபான்மை சமூகத்திற்கு, இந்த வட்டார முறைத் தேர்தல் சாதகமான தேர்தல் முறையாக அமையாது.

வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்றும், தாம் அறிமுகப்படுத்திய தேர்தல் முறை பிழையானது என்றும், இதை அறிமுகப்படுத்தியவர்கள் பிற்காலத்தில் யோசிப்பார்கள் என்றும் நாங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் சொன்னோம். ஆனால், அவர்கள் பிழையான தேர்தல் முறை என்று இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை எடுத்துக் கொள்வோமாக இருந்தால், இங்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில் ஐம்பத்தொரு வீதமான வாக்குகளுக்கு அதிகமான வாக்குகளை ஒரு கட்சிக்கு அளிக்கப்படவில்லை என்று சொன்னால், தவிசாளரை சபையிலேதான் தெரிவு செய்ய வேண்டும். அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும் ஐம்பத்தொரு வீதத்திற்கு குறைவான வாக்குகளை அக்கட்சி பெற்று இருக்குமாக இருந்தால், தவிசாளரை தெரிவு செய்ய அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து சபையிலேதான் தெரிவு செய்ய வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன், இத்தேர்தலில் எமது கட்சிக்கு அதிகமான வாக்குகளை வாக்காளர்களாகிய நீங்கள் வழங்குவதன் மூலம் எமது கட்சியினுடைய தவிசாளரை, பிரதி தவிசாளரை கட்சியினூடாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். மாறாக குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வட்டாரங்களை நாம் வென்று கொண்டாலும், சபையிலே பிரதி நிதித்துவத்தையும், தலைவரையும் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்ற பிரச்சினை இருக்கின்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பதினொரு வட்டாரத்தில் போட்டியிடுகின்றது. இதில் பத்து வட்டாரத்தில் எமது கட்சி அங்கத்தவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. முஸ்லிம் பிரதேசத்தில் ஒன்பது வட்டாரம் உள்ளது, எப்படி பத்து வட்டாரத்தை வெல்ல முடியும்? என்று நீங்கள் யோசிக்கக்கூடும். தேர்தல் முடிவின்போது இதற்கான தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.

எங்களால் அறிமுகப்படுத்தியுள்ள வேட்பாளர்கள் மிகவும் பெறுமதியானவர்கள். இவர்களைவிட தெரிவு உங்களுக்கு வேறொன்றும் கிடையாது. வெருமனே வெற்றிபெற்று அவர்களது பிழைப்புக்காக மாத்திரம் கொண்டுவரவில்லை. ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் இருந்து பறிபோன ஐந்து கிராமசேவகர் பிரிவுகளையும் மீட்பதற்கு வரவிருக்கின்ற தவிசாளர், உறுப்பினர்கள் முன்னெடுப்பு செய்ய வேண்டும். அதேபோன்று கோறளைப்பற்று பிரதேச சபையிலே உள்ள நான்கு உறுப்பினர்களும் புதிதாக அமையப் பறவுள்ள கோறளைப்பற்று மத்திய பிரதேச சபையின் உருவாக்கத்திற்கு உழைக்க வேண்டும்.

அதேபோன்று வீதிகளுக்கு பெயரிடல் வேண்டும். தெரு விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். வீடுகளுக்கு இலக்கம் வழங்கப்பட வேண்டும். வீதி மற்றும் வடிகான்களை நூறு வீதம், இந்த பிரதேசத்திலே தெரிவு செய்யப்படுகின்றவர்கள் உறுதி செய்து தர வேண்டும், டெங்கு என்கின்ற நாற்றம் இந்த பிரதேசத்திலே இருக்கக்கூடாது. போதை ஒழிப்பு சம்பந்தமாக தங்களது நேரங்களை அதிகம் செலவு செய்ய வேண்டும். ஊழல் இல்லாத சபை உறுப்பினர்களாக இருப்போம் என்று பள்ளிவாயலிலே சத்திய பிரமானம் செய்து கொள்ள வேண்டும்.

கொந்தராத்துக்காக பிரச்சினை படுகின்றவர்களாக இல்லாமல் இருக்க வேண்டும். இரவு நேர வாசிகசாலையொன்று இப்பிரசேத்திலே உருவாக்கப்பட வேண்டும். நவீன வசதிகளை கொண்ட ஒரு மடுவம் அமைத்துத் தரப்பட வேண்டும். இவைகளை செய்து தரவில்லை என்று சொன்னால் அடுத்த தேர்தலில் யார் இருப்போமோ, இல்லையோ தெரியாது. ஆனால், வாக்காளர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களிடம் இவ்வாறான விடயங்கள் நிவர்த்தி செய்து தராவிட்டால் அவர்களிடம் கேள்வியாக கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *