Breaking
Sat. May 4th, 2024

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு குழுவினருக்கு சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப் மூலமாக இட்டுக்கட்டப்பட்ட தகவல் ஒன்று பகிரப்பட்டது. சட்டத்தரணி மைத்திரி குணரத்னவையும் இதில் தவறாக சித்தரித்திருந்துடன் சிராஸ் நூர்தீனின் மர்ஹூமான தந்தையையும் அவமதிக்கும் வகையில் அத் தகவலை எழுதியிருந்தனர்.

இந் நிலையில் இத் தகவல் முதலில் பகிரப்பட்ட வட்ஸ்அப் குழு, அக் குழுவின் நிர்வாகி (அட்மின்), அதில் பதிவிட்டவர், அதனை வேறு குழுக்கள் மற்றும் தனி நபர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள் என 6 பேர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கொம்பனித்தெரு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சட்டத்தரணி சிராஸ் முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.

இதற்கமைய இவர்களில் நால்வர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்களில் ஒருவர் காதி நீதிவான். இருவர் மௌலவிகள். மற்றொருவர் அரபுக் கல்லூரி அதிபர். ஏனையோர் அதன் நிர்வாகிகள்.

கைது செய்யப்பட்டவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் கிடைக்கப்பெற்ற தகவலையே பகிர்ந்து கொண்டதாகவும் பொலிஸில் தெரிவித்தனர். எனினும் இது 2 வருட சிறைத் தன்டனை மற்றும் தண்டப்பணம் அல்லது இரண்டினாலும் தண்டிக்கப்படக்கூடிய இலங்கை தண்டனைச் சட்டக்கோவை பிரிவுகள் 32, மற்றும் 100 உடன் சேர்த்து வாசிக்கப்படக்கூடிய பிரிவுகள் 120, 485 மற்றும் 486 இன் கீழ் பாரிய குற்றமாகும்.
மேலும் இத்தகைய செயலானது 2007ம் ஆண்டின் 56ம் இலக்க ICCR சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதப்படக் கூடியதாகும்.

அத்துடன் இவை பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடிய மற்றும் பிணை வழங்கப்பட முடியாத தவறுகளாகும்.
சந்தேக நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து இவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிசார் விரும்பிய போதிலும் முறைப்பாட்டாளரான சட்டத்தரணி சிராஸ் மேற்படி நால்வருக்கும் அவர்களது சமூக அந்தஸ்தினை கருத்திற் கொண்டு நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பளிக்க முன்வந்தார்.

தாம் செய்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்வதுடன் அதற்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டும், தாம் பகிர்ந்து கொண்ட தகவல் தவறானது, இட்டுக்கட்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் புதிய தகவல் ஒன்றை தாம் முன்னர் அனுப்பிய அதே குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு அனுப்ப வேண்டும்,  தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கிணங்க இவர்களில் மூவர் மஹரமக புற்று நோய் வைத்தியசாலை அல்லது மாகொல அனாதைகள் நிலையம் என்பவற்றில் ஏதேனுமொன்றுக்கு தலா 5000 ரூபா வீதம் அன்பளிப்புச் செலுத்த வேண்டும், அத்துடன் குறித்த வட்ஸ் அப் குழுமம் ஒன்றின் நிர்வாகியான இந்தத் தகவலை பரப்புவதில் பிரதான பாத்திரமேற்றுச் செயற்பட்ட நபர் ( கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நடந்து கொண்டமைக்காக) கட்புலன், செவிப்புலனற்றோர் நிலையத்திற்கு 25 ஆயிரம் ரூபா அன்பளிப்பாக செலுத்த வேண்டும் எனும் நிபந்தனைகளே சட்டத்தரணி சிராஸ் நூர்தீனினால் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைய இருவர் தலா 5000 ரூபா வீதம் அன்பளிப்புச் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை  சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை தலைமறைவாகியுள்ள, குறித்த தகவலை எழுதிய, பரப்பிய பிரதான சூத்திரதாரிகளான மேலும் இருவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களை நீதிமன்றில் நிறுத்தவும் அவர்களுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா மான நஷ்டயீடு கோரவும் சட்டத்தரணி சிராஸ் தீர்மானித்துள்ளார்.

இவ்வாறு அவதூறுகளை பரப்புவது சட்டத்தின் பார்வையில் எவ்வளவு பாரதூரமானது என்பதை சமூகத்திற்கும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்கவே தான் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை என்றும் சட்டத்தரணி சிராஸ் குறிப்பிடுகிறார்.

ஆக, இந்த சம்பவம் சகலருக்கும் நல்லதொரு பாடமாகும். இன்று அளவுக்கதிகமான வட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மிக வேகமாகப் பரப்பப்படுகின்றன. இவற்றுடன் சம்பந்தப்படுவோர், இவ்வாறான குழுக்களின் அட்மின்கள், கிடைத்ததையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு  “As I received” எனக் குறிப்பிட்டு பகிர்வோர் என எல்லோரும் இனிக் கவனமாக நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *