ஷரியா சட்டம் என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லாதபோது அதற்கு எதிரான கண்டனம் தெரிவித்து அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா கூறுவது முட்டாள் தனமான நகைப்புக்குரிய விடயமாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
ஷரியா சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் அதனை பற்றிப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. திருடியவர்களின் கையை வெட்டுவதுதான் ஷரியா சட்டம். அது இலங்கையில் உள்ளதா? உண்மையில் ஒவ்வொரு முஸ்லிமும் ஷரியா சட்டத்தினை பின்பற்றித்தான் நடக்க வேண்டும். ஆனால், இலங்கையில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா கூறுவது அதன் காழ்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
ஷரியா சட்டங்களின் மூலமே காதி நீதிமன்றங்கள் இயங்குவதாகவும் திருமணங்கள் நடைபெறுவதாகவும் பொதுபலசேனாவினர் தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும். விவாகம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் என்பனவே காதி நீதிமன்றங்களில் உள்ளன. இவை அரசியலமைப்பிற்கு உட்பட்டவையாகும். பாராளுமன்ற அனுமதியுடன் இவை நடைமுறைப்படுத்தப்பட்டவை என்பதனை பொதுபலசேனாவினர் தெரிந்து கொள்ள வேண்டும். – தெரிவித்தார்