ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தீர்ப்பு வெளியாகும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருப்பதால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பை தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு விவரம் காலை 11.05 மணிக்கு தெரியவரும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களுரு காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி:-தேவையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிகளவில் மக்கள் தமிழகத்தில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் வந்து ஆங்காங்கே அவர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இதனால் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் முழுமையான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் .இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோர் நீதிபதி உத்தரவின்படி, ஆஜராவதற்காக இன்று காலை .சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களுரு சென்றுள்ளனர்.