கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள் (15) நடைபெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான காலாண்டு மதிப்பீட்டின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வரவு செலவு திட்டங்கள் அதிகரிப்புக்கள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியின் மூலமாகவே அளவிடப்படுகின்றது.
அவ்வாறு இருக்கையில் 2014 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி 840.653 பில்லியன் ரூபாவாகும். இவ்வளர்ச்சியானது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.8 சதவீத வளர்ச்சியை காட்டிநிற்கிறது . ஏனெனில் 2013 ஆம் ஆண்டில் கிடைத்த வளர்ச்சி 779.974 பில்லியன் ரூபாவேயாகும் என தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த துரித வளர்ச்சிக்கு மூன்று துறைகளின் பங்களிப்பு மிகவும் பங்காற்றியுள்ளது. அவ்வகையில், விவசாயத்துறையின் பங்களிப்பு 10.6 சதவீதத்தினாலும், தொழில்துறையின் பங்களிப்பு 31.5 சதவீதத்தினாலும், சேவைகள் துறையின் பங்களிப்பு 58 சதவீதத்தினாலும் உறுதுணை வழங்கியுள்ளது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வனவியல் 5.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது. இது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.5 வீத வளர்ச்சிக்குறைவினை காட்டுகிறது. தொழில்துறை வளர்ச்சி 12.2 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது, இது 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.1 சதவீத வளர்ச்சியைக் காட்டி நிற்கிறது.மேலும் விவசாயத்துறையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சி 7.1 % மாகவும், தெங்கு உற்பத்தி வளர்ச்சி 9.4 % மாகவும், இறப்பர் உற்பத்தி 3.7 % மாகவும், வளர்ச்சியடைந்துள்ளது. இதேவேளையில் மீன்பிடி உற்பத்தி 10.5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
(NS)