Breaking
Fri. May 3rd, 2024
இந்தோனேசியாவின் புதூர் விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பௌத்தர்கள் என்ற வகையில் மிகவும் அக்கறையுடனும் உன்னிப்பாகவும் அவதானித்து கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் மொசூல் நகரில் இடம்பெறும் கொடூர மிலேச்சத்தனமான செயல்கள் பற்றி மாத்திரமல்லாது இந்தோனேசியாவின் போரோ புதூர் பௌத்த விகாரைக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை பரீட்சிக்கும் சந்தர்ப்பம் என்பதால், அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவதானித்துக் கொண்டு இருகின்றோம்.
இலங்கையில் தலையெடுத்து வரும் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து அரச பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்தோனேசியாவின் போரோ புதூர் விகாரையை அழிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையையும் அச்சுறுத்தலையும் சிறியதாக கருதி விட முடியாது.
இதற்கு முன்னர், ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியின்போது உலகில் மிகப் பெரிய புத்தர் சிலைகளான பாமியன் புத்தர் சிலைகள் பகிரங்கமாக பீரங்கி தாக்குதலினால் அழிக்கப்பட்ட விதத்தை மறந்து விட முடியாது.
பௌத்த உலகம் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதிக்கும் உலக மக்கள் அனைவரின் எதிர்ப்புக்களையும் மீறி தலிபான் அடிப்படைவாதிகள் பாமியன் புத்தர் சிலைகளை அழித்தனர்.
கௌதம புத்த பகவான் ஞானம் பெற்ற புத்தகாயா மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்களை அழித்தமை தொடர்பான தகவல்கள் கடந்த காலங்களில் கிடைத்தது.
சிரியா மற்றும் ஈராக்கில் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் நபர்கள் இணைந்து போராடி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு தரப்பினரும் அறிக்கையிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் அவர்களுடன் இணைந்து செயற்படவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். சன்னி முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஈராக்கில் மொசூல் நகரில் அமைந்திருந்த பல நூற்றாண்டுகள் பழமையான கிறிஸ்தவ ஆலயத்தை தரைமட்டமாக்கியதுடன் அங்கு வசித்து வந்த பண்டைய கால வரலாற்றுக்கு உரிமை கொண்டாடிய கிறிஸ்தவ மக்களையும் கொலை செய்தனர்.
மேலும் சிலரை அங்கிருந்து விரட்டியுள்ளதுடன் பலரை பலவந்தமாக மத மாற்றம் செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், புனித பாப்பரசர் உட்பட உலகின் கோரிக்கைகளையும் எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாத ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்தும் வேற்று மதத்தினரை கொலை செய்து வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளின் கொடூர மிலேச்சத்தனமான செயலானது உலக இருப்புக்கும் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *