Breaking
Mon. Apr 29th, 2024

ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஐநா பாதுகாப்புச்சபை உலக நாடுகளின் அரசுகளுடன் ஒன்றிணைதல், ஒத்துழைத்தல் மற்றும் சேர்ந்து செயற்படுதலுக்கான புதிய காலகட்டம் உருவாகியிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.

உலக அளவில் நம் சமகாலத்தில் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவி பிள்ளையின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் நகாசுபூச்சு செய்யப்படாத வெளிப்படையான அறிக்கைகளில் இருந்து ஐநா பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் பெருமளவு பயன்பெற்றார்கள் என்றும் அவர் கூறினார்.

“தாம் கண்டதை கண்டபடியே சொல்லுவார் நவி பிள்ளை. மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனிதர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞராக நவி பிள்ளை இருப்பார் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும். மற்றவர்கள் சிலபல விஷயங்களை பேசத்தயங்கும் சமயங்களில்கூட, நவி பிள்ளை தைரியமாக வெளிப்படையாக பேசத்தயங்காதவர். பயம் இல்லாமல் பேசக்கூடியவர்” என்றார் பான்கி மூன்.

நவி பிள்ளையின் ஐநா பணி முடிவுக்கு வந்தாலும் ஐநா பாதுகாப்புச்சபையையும், உலக மனிதர்களையும் பாதிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான முக்கிய குரலாக நவிபிள்ளையின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று பான் கி மூன் நம்பிக்கை வெளியிட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக நவி பிள்ளையுடன் இணைந்து பணி செய்ய நேர்ந்தது குறித்து தாம் நன்றியுடன் பெருமையடைவதாகவும் பான்கி மூன் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *