ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராலிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் ஈராக் ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மேலும் 200 சிறப்பு அதிரடிப்படை வீரர்களை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டு உள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பல்வேறு நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகள் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சிரியா எல்லையை ஒட்டிய குர்தீஷ் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு எண்ணெய் கிணறுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அத்துடன் சிரியாவின் கோபென் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வன்முறை தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகளின் தாக்குதலை முறியடித்து ஒடுக்குவதற்காக அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.
சிரியாவின் கோபென் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகளின் முகாம்களின் மீது நேற்று மாலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் ஏராளமான ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகள் பலியாகி உள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி மற்றும் பல்வேறு உதவிகளை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் 200 சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் இம்மாத இறுதிக்குள் செல்வார்கள் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் ஜூலி பிஷப் நேற்றிரவு கான்பெர்ரா நகரில் கூறினார்.
தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகளுக்கு எதிராக நாள்தோறும் நடைபெற்று வரும் வான்வழி தாக்குதலில், ஆஸ்திரேலியா சார்பாக 6 அதிநவீன போர்விமானங்களும் நூற்றுக்கணக்கான வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.