காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது.
காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ், இம்மாதம்; 12ஆம் திகதி ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு சாத்தியமில்லை என்று கூறி, பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.
இது குறித்து பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவது கவலை அளிக்கிறது.
எல்லையில் நடக்கும் தாக்குதல்களால் இரு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இதனை சரி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் பலன் அளிக்காமல் உள்ளது.
இந்தப் பிரச்சினையை நீண்ட கால அடிப்படையில் தீர்வு ஏற்படுத்த பேச்சுவார்த்தை ரீதியிலான இணக்கத்தை இருத் தரப்பும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளின் முயற்சியால் மட்டுமே காஷ்மீரில் நிலையான அமைதி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.