இலங்கையில் 16 வயது முடிவடைந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் தண்டம் விதிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசாங்கத் திணைக்களம் உட்பட வங்கி போன்ற பல சேவை மையங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தேசிய அடையாள அட்டை மிக முக்கியமானது. இதனால் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
16 வயது முடிவடைந்து ஒரு வருட கால எல்லைக்குள் நிச்சயமாக அனைவரும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக தண்டம் விதிக்கப்படும்.
இதேவேளை கைவிரல் அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்படும் புதிய அடையாள அட்டை விநியோகத்திற்கு சில
எதிர்மறையான கருத்துக்களும் வெளிவருகின்றது. இருப்பினும் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிப்பதற்கான ஆயத்தம் பிரதேச செயலகம் ஊடாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.