சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் 28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஷி ஜின் பின்ங் இற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதன்பின்னர் சீன ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது.
அதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் திட்டத்தின் கீழ் சீனாவும் இலங்கையும் 20 இற்கும் அதிகமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.
இதையடுத்து, 1.34 பில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இறுதிக் கட்டம் சீன ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்ங் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கொழும்பு துறைமுக நகரின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக நாளைய தினம்
கொழும்பு சர்வதேச கொள்கலன் களஞ்சிய தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.