எதிர்வரும் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஊடகமொன்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினாவியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் நிச்சயமாக தீர்மானமெடுக்கும். நாட்டின் ஆட்சியினை தீர்மானிக்கும் தேர்தலில் தமிழ் மக்களின் பங்கு அவசியமானது. எனவே இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூடி வெகுவிரைவில் முடிவெடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.