சட்டத்தை காலில் உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் போட்டியிடுவது பொது வேட்பாளரா அல்லது வேறும் ஒர் வேட்பாளரா என்பதனை விடவும், சட்டவிரோத தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்படுவது அரசாங்கத்திற்கு வாடிக்கையாகியுள்ளது.
இந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலையும் அறிவிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. எனவே இந்த தேர்தல் அறிவிக்கப்படுவதனை தடுக்க நாம் முயற்சிக்கின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட ரீதியான நடவடிக்கைகளின் மூலம் தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கின்றோம். பொருட்கள், எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் போன்றவற்றின் விலைகளை குறைத்து எவ்வாறான தந்திரங்களைச் செய்தாலும், ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும். சட்டத்தை காலில் உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது. நல்ல வழியிலோ அல்லது கெட்ட வழியிலோ தேர்தலை வென்றெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.