ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் இன்று 14-10-2014 முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார்.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தீர்மானமிக்க ஓர் சந்திப்பினை நடத்த உள்ளார்.
தூய்மையான நாளை என்ற அமைப்பின் தலைவராக செயற்பட்டு வரும் ரத்ன தேரர், அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருந்தார்.
தமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து தீர்மானிக்கும் முக்கியமான பேச்சுவார்த்தையொன்று இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களைப் போன்றே ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர்.
17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், அரசியல் அமைப்பினை மாற்றியமைத்து தேர்தல் நடாத்துதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரத்ன தேரர் அரசாங்கத்தின் முன்னிலையில் வைத்துள்ளார்.
கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் அளிக்கப்படாவிட்டால் ஆளும் கட்சியை விட்டு விலக நேரிடும் என ரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ரத்ன தேரரின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்காத நிலையில் அவர் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுவாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.