தமிழகத்தில் மேலும் 5 பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட உளவாளி அருண்செல்வராசனை விசாரித்த உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,ஏற்கனவே கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் ஆகியோரிடமும் நான் விசாரணை நடத்தி இருக்கிறேன். தற்போது பிடிபட்டுள்ள அருண்செல்வராசனிடமும் நான் விசாரணை நடத்தினேன். தமீம் அன்சாரி மிகவும் அழுத்தமானவர். அவரிடம் தகவல்களை பெற சிரமம் ஏற்பட்டது.ஆனால் ஜாகீர் உசேனும், அருண்செல்வராசனும் சிரமம் இல்லாமல் தகவல்களை சொன்னார்கள். ஜாகீர் உசேன் இலங்கையில் கண்டியில் பிறந்தவர். 10-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். திருமணம் ஆனவர். அவர் துணி வியாபாரி போல, தமிழகத்திற்குள் நுழைந்திருக்கிறார். அவர் கள்ள நோட்டுகளையும் புழக்கத்தில் விட்டார்.தற்போது பிடிபட்டுள்ள அருண்செல்வராசன் பட்டப்படிப்பு படித்துள்ளார். விமானம் ஓட்டவும் பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர் இலங்கையில் கொழும்பில் பிறந்துள்ளார். திருமணம் ஆகாதவர். அவரது தந்தை கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் நடத்தி உள்ளார்.ஹோட்டலில் நஷ்டம் ஏற்படவே, அருண்செல்வராசன் குடும்பம் சென்னை வந்துள்ளது. 8-வது வகுப்பில் இருந்து 10-வது வகுப்பு வரை அவர் சென்னையில் படித்துள்ளார். அதன்பிறகு மீண்டும் இலங்கை சென்று பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மீண்டும் தமிழகம் வந்துள்ள அருண் செல்வராசன், பாகிஸ்தான் உளவாளியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழகம் வந்துள்ள தகவலை, ஜாகீர் உசேன் மற்றும் தமீம் அன்சாரி மூலம், தெரிந்துகொண்டோம். அவரது செல்போன் நம்பரும் கிடைத்து விட்டது.அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தோம். அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்திக்கொண்டே, உளவு பார்க்கும் தொழிலையும் செய்துள்ளார். அவர் நடத்திய ஐஸ்ஈவென்ட் நிறுவனம், நல்ல இலாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது.அருண் செல்வராசனை, விமானியாக பயிற்சி பெற ஐ.எஸ்.ஐ. உளவு அதிகாரிகள்தான் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு செலவான தொகையும், பாகிஸ்தான் உளவு அமைப்பால் கொடுக்கப்பட்டுள்ளது. உளவு வேலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், விமானத்தை கடத்தி நாசவேலையில் ஈடுபடும் திட்டத்தை நிறைவேற்றவும், இவரை பயன்படுத்த, பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் அதுபோன்ற திட்டம் எதுவும் அருண்செல்வராசனிடம் அவர் பிடிபடும் வரை சொல்லப்படவில்லை.அவர் தனது வங்கி பணப்பரிமாற்றங்கள் அத்தனையையும், உ.பி.மாநிலம் மொரதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம்தான் செய்துள்ளார்.மேலும் 4 அல்லது 5 பேர் உளவு கும்பலைச் சேர்ந்தவர்களில் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார்.