தம்புள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சில விஷமிகள் பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவத்தை ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வன்மையாக கண்டித்துள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென்னும் ஒரே நோக்கிற்காக இது விஷமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனவும் அவர் உறுதியாக கூறினார்.
புலனாய்வுத் துறையினர் மேற்படி கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும் விஷமத்தனத்திற்கு காரணமானவர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடு க்கப்பட வேண்டுமென தான் அரச தலைவர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அஸ்வர் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஊவா மாகாணத்தின் தேர்தல் கள நிலவரங்களை மேற்பார்வை செய்வதற்காக அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டுள்ள அஸ்வர் எம்.பி மொனராகலையிலிருந்து இத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். அஸ்வர் எம்.பி, ஊவா மாகாணத்தின் அனைத்து பகுதியிலும் வாழும் முஸ்லிம்களை சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் இச்சம்பவம் குறித்து கலக்கமடையவோ, அலட்டிக் கொள்ள வோயில்லை எனவும் கூறினார்.
இது விஷமிகளின் செயலென்பதை எமது மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் காக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் அஸ்வர் எம்.பி. தினகரனுக்கு தெரிவித்தார்.