Breaking
Sun. May 5th, 2024
முஸ்லிம் சமூக அரசியலின் பின்புலமாக இருந்து, பல அரசியல் தலைவர்களை நெறிப்படுத்திய பெருந்தகை எம்.ஐ.எம்.மொஹிதீனின் இழப்பு, தன்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 
அவரின் மறைவு தொடர்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது,
 
“இனிமையாகப் பழகும் மர்ஹும் எம்.ஐ.எம்.மொஹிதீன், நமது சமூகத்தின் அழியாச் செல்வம். அவர் மறைந்தாலும் சமூகத்துக்காக அவர் செய்த பணிகள், எனது மனக்கண் முன் அவரை ஞாபகமூட்டுகிறது.
 
பன்முக ஆளுமைமிக்கவரும், தலைசிறந்த வரலாற்று ஆய்வாளருமான நூலாசிரியர் எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பாரிய இழப்பாகும்.
 
சமூகத்துடிப்பில் ஆழமான பற்றுடன் பணியாற்றிய அவரது சிந்தனைகள், அந்திம காலம் வரைக்கும் அவரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தது.
 
இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்குள்ள வகிபாகத்தை ஆவணங்களூடாக அடையாளப்படுத்தியவர் மொஹிதீன்.
தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த சமூகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, இனப் பிரச்சினையை நியாயமாகத் தீர்க்க அரும்பணியாற்றினார்.
 
வடபுல வெளியேற்றத்தில் இழக்கப்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள், சொத்துக்களை தரவுப்படுத்தியதால் சர்வதேசத்தின் கண்களையும் திறக்கச் செய்ய வழிசெய்திருந்தார் அவர். எமது கட்சி சார்ந்த சமூகப்பணிகளில் என்னுடன் இணைந்தும் அவர் பணியாற்றினார்.
அவரின் இழப்பால் சமூகத்தின் ஆளுமை இடைவெளியாகி இருப்பதாகவே உணர்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரைப் பொருந்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் சகலருக்கும் கழாக்கதிரைப் பொருந்திக்கொள்ளும் பக்குவத்தை வழங்கப் பிரார்த்திக்கிறேன்.”

Related Post