Breaking
Thu. May 16th, 2024

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என கவலை வெளியிட்டுள்ளார். நல்லது. நாமல் ராஜபக்ஷவிற்கு தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்களின் செயற்பாடுகளால் துன்புறுத்தப்பட்ட,கொல்லப்பட்டவர்களின் பல குடும்பங்கள்,தந்தைமார், பெற்றோர்,குழந்தைகள் அழுதது நினைவில் இல்லையா?

அவரது அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்தினை மதிக்கும் அதற்கு கட்டுப்படும் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அவலத்தை , அவமானத்தை, அநீதியை ஓருபோதும் மறக்க முடியாது.

எனது தந்தையை அவர்கள் ஓரு விலங்கினை இழுத்துச்செல்வதை போல அவரது அலுவலகத்திலிருந்து இரகசிய தடுப்பு முகாமிற்கு இழுத்துச்செல்வதையும், எங்கள் குடும்பம் அவரிற்கு என்ன நடைபெற்றது என அறிய முடியாமல் வேதனைபட்டதையும், அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது தெரியாமல் தடுமாறியதையும் இங்கு கூறுகின்றோம்.

சட்டத்திற்கு புறம்பான நீதிமன்றமொன்றில் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வதை பார்ப்பதும் , அல்லது அன்னைமார்களின் கண்ணீரை பார்ப்பது,ஆதரவற்றவர்களாக, தங்கள் கணவன்மார்களிற்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களாக, எனது குடும்பமும்,எங்களது உறவினர்களும் குற்றவாளிகளை போல தொடர்ச்சியாக வேட்டையாடப்படுவதையும், துன்புறுத்தப்பட்டு வேலை ,உரிமைகள், மன அமைதி என்பன பறிபோவதையும்,பார்ப்பது மிகவும் வேதனையான ஓரு விடயம் என சொல்லலாம்.

நாட்டில் தற்போது சரியான காரணங்களிற்காக செயற்படும் நடைமுறை காணப்படுவதற்கும் , சட்டம் எந்தவித தலையீடுகளும் இன்றி செயற்படுகின்றமைக்கும், நள்ளிரவில் மக்கள் வெள்ளைவானில் கொண்டு செல்லப்படும் நிலை இல்லாதமைக்கும் நாமல் ராஜபக்சவும்,அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்கவேண்டும்,

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும்.vk

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *