ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன. இதற்கிணங்க இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல், பிரசாரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தல், பிரசார விளம்பரங்களை வெளியிடுதல் உட்பட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சகல செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமும் வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் மாகாணத்தின் இரு மாவட்டங்களிலுமுள்ள வேட்பாளர்களின் அலுவலகங்களை நாளை வியாழக்கிழமை நள்ளிரவு வரை பேணிவர முடியுமெனவும் ஆனால், அங்குள்ள பிரசாரப் பலகைகளையும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளையும் இன்று நள்ளிரவுக்குள் அகற்றிவிட வேண்டுமெனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.