ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகளினால் வெற்றியீட்ட முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. ஆளும் கட்சியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடுகள் உறுதியாவதனை மாற்றியமைத்தே அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல வேண்டும். எம்மில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களினால் உணரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் முடிவடைந்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல்களை நடத்த முடியும்.
எனினும், அரசியல் ரீதியான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மக்களினால் உணரக்கூடிய மாற்றங்களை செய்ததன் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சிக்கும் தாவ உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எனினும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்லும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்றே நான் கருதுகின்றேன். பொது வேட்பாளர் அல்லது பல வேட்பாளர்கள் போட்டியிட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு பாதக நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.