Breaking
Sun. Apr 28th, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களை முன்னிறுத்தி உருவான கட்சி அல்ல எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

நடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் டாக்டர்.ஹஸ்மியாவின் ஊடாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை ஆகிய இடங்களில் கடந்த சனிக்கிழமை (23) இடம்பெற்ற மகளிர் அணிக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களின் தேவைகளை இனங்காணும் கட்சியாகவும், எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், கல்விக்கு முன்னுரிமை கொடுத்து கல்வி நலத் திட்டங்களை மேம்படுத்தியும், கிராம அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தும் வருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவராக நமது சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அத்துடன், நாடளாவிய ரீதியில் பரந்தளவில் எமது கட்சியின் சேவைகளைத் தொடர, நாளாந்தம் மக்களின் ஒத்துழைப்புக்களும் எமக்குக் கிடைத்த வண்ணமே இருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டதுடன், அந்தந்த பிரதேசத்துகுரிய வேட்பாளர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் பிரதேச அமைப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த கிராமத்துக்கான மகளிர் அணித்தலைவிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

நிலாவெளி பிரதேசத்துக்காக செல்வி.பர்ஸுனா, குச்சவெளி பிரதேசத்துக்காக திருமதி.அறுஜுன் பீபி (சாஹிரா கல்லூரி ஆசிரியை), புடவைக்கட்டு பிரதேசத்துக்காக திருமதி.நாகூர் உம்மா, புல்மோட்டை பிரதேசத்துக்காக செல்வி.சாஹிரா பானு ஆகியோர் மகளிர் அணித்தலைவிகளாக நியமிக்கப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *