“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு-

பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை, ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

கம்பஹா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

பெண்களை கெளரவப்படுத்த வேண்டும். அவர்களிடமும் சிறந்த சமூக சூழல் உருவாக வேண்டும். அவர்களிடமிருந்தும் பெண் சமூகம் அதிக பயன்களைப் பெறவேண்டும்.

இவ்வாறான நல்ல நோக்கங்களைக் கொண்டுதான், இம்முறை உள்ளூராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் கம்பஹா உள்ளிட்ட 14  மாவட்டங்களில்  வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், இதில் 25 சதவீதமான பெண் வேட்பாளர்கள் இம்முறை உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனவேதான், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக,  பெண்கள் தமது முழு அளவிலான ஆதரவுகளையும் ஒருமித்த மனதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்க முன்வர வேண்டும். இதன் மூலம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ், பெண்களின் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றார்.