Breaking
Fri. Dec 5th, 2025

உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கரை தோன்றா வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக மாறும் எனவும் அதற்கு முன்னர் இதனை தடுக்க வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுயாதீன கல்வி உரிமையை மாணவரிடம் இருந்து பறித்து, பணம் படைத்தவரிடம் கல்வியை விற்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

அதாவது, “நரியிடம் இருந்து கோழியை பரிப்பது போல” மாலபே விடயம் சுகாதார அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த காலத்தில் மாணவர்கள் எவ்வாறு வதைக்கப்பட்டு உரிமைகள் முடக்கப்பட்டதோ, அது போலவே நல்லாட்சி அரசிலும் மாணவர்களுக்கான பாதிப்பு தொடர்வதும், வகுப்புத் தடைகள் விதிக்கப்படுவதும் காணப்படுவதாக கூறினார்.

போராட்டத்தை தொடர்ந்து வீதியில் இருக்கும் மாணவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

By

Related Post