நல்லாட்சி அரசின் 1000 குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனை கள்ளிச்சை குளம் புனரமைப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி!!!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் ஆயிரம் குளங்கள் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம்  நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவின் கீழ் உள்ள கள்ளிச்சை குளத்தினை புணரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இடம்பெற்றது.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பீ. ஜௌபர், என். கிருபைநாதன், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். ரஹீம் மற்றும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விவசாய அமைச்சின் ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படும் இக் குளத்தின் மூலம் இருநூறு (200) ஏக்கர் வேளாண்மை இரு போகமும் செய்யலாம் என கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தெரிவித்தார்.