Breaking
Mon. Apr 29th, 2024

கடந்த 15 வருடங்களாக மேற்கொண்ட ஹலாலான முயற்சிகளுக்கும், ரமழான் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு செயற்பாடுகளுக்கும் உபகாரமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி கூட்டணியை இறைவன் பரிசளித்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

நேற்று (20) காத்தாண்குடி, பீச் வே ஹோட்டலில் இடம்பெற்ற  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முண்ணணி புரிந்துணர்வு கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வருங்காலம் காத்தாண்குடிக்கு ஒரு பிரதிநிதி, ஏறாவூருக்கு ஒரு பிரதிநிதி, கல்குடாவுக்கு ஒரு பிரதிநிதி என்ற நிலை மாறி, எல்லோருக்கும் ஒன்று என்ற நிலையே மிகுதியாக வந்து நிற்கும் எனவும், இந்த நிலைகளிலிருந்து பாதுகாப்பு பெற, தன்னால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை திட்டமிட்டு இல்லாமல் செய்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஒன்று, இரண்டு, பதினொன்று மூலமாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ், சகோதரர் ஜவாஹிர் ஷாலி, சகோதரர் சுபைர் ஹாஜியார் என மூன்று ஊர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை பெற்றெடுத்தும், அந்த கூட்டை திட்டமிட்டு இல்லாமல் செய்தமையையும் நினைவூட்டினார்.

2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் தோற்பேன் என்று தெரிந்திருந்தும், சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடன் களமிறங்கி ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் காக்கின்ற பிரயத்தனத்தையும், ஊர்வாதம் பாராது தான் மேற்கொண்டதையும், தேசியப்பட்டியல் உரிய காலப்பகுதியில் கிடைக்கப்பெறாததையும் நினைவுபடுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இம்முறையும் கல்குடா சமூகம் “ஒன்று இரண்டாகும்” என்ற வாசகங்களுடன் ஊர்வாதங்களை துடைத்தெறிந்து, சுவரொட்டிகளை கல்குடா பூராக ஒட்டியிருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

அமீர் அலி என்பவர் அரசியலுக்குள் வந்தது தற்காலிக ஏற்பாடு என்றும், என்ன விலை கொடுத்தேனும் பதவிளை பெற்றுவிட வேண்டும் என்கிற உக்கிர போராட்டத்துக்கு தான் தயாராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

எதிர்வரும் பாராளுமன்றத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சாதுர்யமான நல்ல தலைவர்கள் அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், எதிர்கால பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மொட்டு அணிக்கு சில வேலைகளில் கிடைத்தால், முஸ்லிம் தனியார் சட்டங்களில் கைவைக்கப்படும் என்ற அச்சமும் இருப்பதால், ஆளுமையும் திறனும் கொண்ட, நல்ல தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் என்று கூறினார்.

Related Post