Breaking
Thu. May 2nd, 2024

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு, மட்டக்குளியில் நேற்று (28) இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த பகிரங்க வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“அசாத் சாலியை விசாரணை செய்து, அவர் தவறிழைக்காவிட்டால் உடனடியாக விடுதலை செய்யுங்கள். சமூகத்துக்காக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, அவரின் குரல்வளையை நசுக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது தருமமும் நீதியும் அல்ல. சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஓயாது குரல் கொடுத்தவர். குறிப்பாக, ஜனாஸா அடக்கும் முயற்சிகளுக்கும் அவர் எங்களுடன் இணைந்து போராடினார்.

அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் ஆளுநரும் கூட. எனவே அவரை அநியாயமாக பழிவாங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

 

Related Post